நாங்கள் MCA மூன்றாம் ஆண்டில் கல்லூரி விடுதியை விட்டு வெளியில் வந்து வேறு அறை எடுத்து தங்குவது என்று முடிவு செய்தோம். மூன்றாம் ஆண்டில் project இருக்கும் காரணத்தினால் அரை ஆண்டு மட்டுமே விடுதியில் தங்க வேண்டியது இருந்தாலும் கல்லூரி நிர்வாகம் ஆண்டு முழுவதற்குமான கட்டணத்தை செலுத்த சொன்னதும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.
அம்பாதுறையில் ஒரு அறை வாடகைக்கு எடுத்தோம். அதை அறை என்பதை விட வீடு என்றுதான் சொல்ல வேண்டும். நான், கும்மி, JG, சாந்தா மற்றும் பெயர் சொல்ல விரும்பாத, பின்னர் எதிரியாகிப் போன ஒரு நண்பன்(?). இது போக இன்னமும் இரண்டு பேர், தினமும் வந்து போகும் உறுப்பினர்கள்.
ஆரா திண்டுக்கல்லில் அவனுடைய அக்காவின் வீட்டிலிருந்து கல்லூரிக்கு வந்தான். தினமும் கல்லூரிக்கு வருகிறானோ இல்லையோ, எங்களுடைய வீட்டிற்கு வரத்தவறுவதில்லை. காய்ரா என்று எங்களால் செல்லமாக அழைக்கப்படும் கணேஷ்பாபு மதுரையில் இருந்து நேரடியாக எங்கள் வீட்டிற்கு வந்த பிறகுதான் கல்லூரிக்குச் செல்வான். நிரந்தர உறுப்பினர்களை விட ஆராவும், காய்ராவும் தான் கல்லூரி முடிந்தபின் வீட்டிற்கு முதலில் வந்து, பால் வாங்கி, காபி போடுவார்கள். அதுவும் காய்ரா வந்து காபி குடித்துவிட்டு, மாடியில் இருந்து ரயில் வருகிறதா என்று பார்த்து, தூரத்தில் ரயில் தென்பட்ட பிறகுதான் ரயில் நிலையத்திற்கு ஓடுவான்.
பூந்தோட்டங்களின் ஒருபுறமாக உள்ள ரயில் பாதை வழியாக தினமும் அம்பாதுறையில் இருந்து கல்லூரிக்கு நடந்து சென்று வருவது இனிய அனுபவம். அதிர்ஷ்டம் பக்கம் இருந்தால் வழியில் பாம்பு, தேள் போன்ற ஜந்துகளையும் பார்க்கலாம். அம்பாதுறை ரயில் நிலையமே எங்களின் குடிநீர் தேவையை தீர்த்து வந்தது. சில பல பிரச்சனைகள் இருந்தாலும் வாழ்க்கை இனிதாகவே போய் கொண்டிருந்தது.
அந்த வாடகை வீட்டில் ஒரே குறை, அசைவம் சமைக்க கூடாதென்பதுதான். வீட்டின் உரிமையாளர் ரொம்பவே நல்லவர். வீடு வாடகைக்கு எடுக்கும் போது அவர் போட்ட ஒரே நிபந்தனை, அசைவம் சமைக்க கூடாதென்பதுதான். JG-யை தவிர அனைவரும் அசைவம் சாப்பிடுபவர்கள். எங்களுடைய அசைவ சாப்பாடு வெறியை ஆம்லெட் வடிவில் தீர்ப்பவை சின்னாளப்பட்டி பிரிவில் இருந்த கையேந்திபவன்களும், காந்திகிராம பல்கலைக்கழக நுழைவாயிலில் இருந்த புரோட்டா கடைகளும்தான்.
எங்களுடைய வீட்டிற்கு அருகில் வீடு எடுத்து தங்கியிருந்த இரண்டு பிரம்மச்சாரி ஆசிரியர்கள் வாராவாரம் சிக்கன் பொரிக்கும் வாசனை ஜன்னல் வழி வந்து எங்களை பாடாய்ப்படுத்தும். சமைக்க கூடாதென்பதுதானே நிபந்தனை, சாப்பிடக்கூடாதென்று கூறவில்லையே என லாஜிக் பார்த்து, ஒருமுறை சிக்கன் வாங்கி, அந்த ஆசிரியர்கள் வீட்டில் பொரித்து, எங்கள் வீட்டில் வைத்து சாப்பிட்டோம்.
கடைசியில் ஒருநாள் அந்த நிபந்தனையை உடைப்பதென்று ஒருமனதாக முடிவு செய்தோம். ஆம்லெட் போடலாம் என முட்டை வாங்கியாகிவிட்டது. ஆனால் ஆம்லெட் மணம் காட்டிகொடுத்து விடுமே என்ற பயம் வேறு. அதற்கு சாந்தா ஒரு யோசனை சொன்னான். வாசனை மிகுந்த பத்தி ஒன்றை வாங்கி கொளுத்திவிடுவது அல்லது ஒரு துணியை தீயில் காட்டி அணைத்து கருக விட்டால், ஆம்லெட் மணத்தை அது மறைத்துவிடும் என்று. ஆனாலும் ரிஸ்க் எடுக்க விரும்பாமல் ஆம்லெட் போடும் எண்ணத்தைக் கைவிட்டு, முட்டை அவித்து சாப்பிடுவதென்று பிளான் மாறியது. (இதே யோசனையை பின்பற்றி, பெங்களூரில் சிக்கன் சமைத்தது வேறு கதை!)
ஒருவழியாக சமையல் முடித்து சாப்பிட உட்கார்ந்தோம். JG-யை தவிர அனைவரின் தட்டிலும் ஆளுக்கொரு முட்டை. ஒருவாய் கூட வைத்திருக்க மாட்டோம், தடார் என்று கதவு திறந்தது. வாசலில் வீட்டின் உரிமையாளர். என்ன செய்வதென்று தெரியவில்லை. கும்மி தட்டை எடுத்துக்கொண்டு உள்ளே ஓடினான். அவசரத்தில் இன்னொருவன் முட்டையை சோற்றை வைத்து மறைக்க முயற்சித்தான்.
முதல் அசைவ சமையல் முயற்சியே இப்படி தோல்வியில் முடிந்து விட்டதே என்ற சிந்தனை வேறு. ஆனால் உரிமையாளர் வந்ததோ வேறு விஷயத்தைப் பற்றிப் பேச. நல்ல வேளையாக அவர் எங்களுடைய தட்டை பார்க்காமலேயே பேசி முடித்து சென்ற பிறகுதான் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பினோம். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நாங்கள் அந்த வீட்டில் அசைவம் சமைக்க முயற்சிக்கவே இல்லை என்பதை சொல்லித்தான் தெரியவேண்டுமா என்ன?
பின் குறிப்பு: முட்டையை சோற்றை வைத்து மறைக்க முயற்சித்த அந்த நபர் வேறு யாருமில்லை, அடியேன்தான்...
பின் குறிப்பு: முட்டையை சோற்றை வைத்து மறைக்க முயற்சித்த அந்த நபர் வேறு யாருமில்லை, அடியேன்தான்...
it is nice to remember those days...
ReplyDelete